Thursday, December 11, 2008

கார்த்திகை...

கார்த்திகை பண்டிகை வந்தால் ஊரே அழகானதுபோல ஒரு பிரமை உண்டாகும். எல்லா வீடுகளின் முன்புறத்திலும் பெரியதாகக் கோலமிட்டு நடுவில் யானை விளக்கு வைத்து அதனைச் சுற்றிலும் சிறிய விளக்குகளை வரிசையாகவும் வட்டமாகவும் பல விதங்களில் வைத்து, வீட்டின் முகப்பிலும், சாளரங்களிலும், முகடுகளிலும் வரிசையாக விளக்கேற்றி வைத்து . . . . . பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். என்னதான் மின்விளக்குகள் பிரகாசமாக ஒளிர்ந்தாலும் நல்லெண்ணெய் மணத்துடன் அகல் விளக்கு எரியும் அழகும் அது தரும் இன்ப உணர்வும் அனுபவிதவருக்கே அலுப்புத் தட்டாத அற்புதம்.

கிராமத்துக் கோவில்களில் சிறப்பு அலங்காரங்களும் பூசனைகளும் அதனை கண்டு மகிழ தங்களையும் சிறப்புற அலங்கரித்து வரும் பெண்டுகளும், ஊரில் மற்ற வீடுகளின் அலங்காரங்களைக் காணவேண்டி வீதி வலம்வரும் இளசுகளும் என்று ரொம்பவும் விமர்சையாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் மெழுகுவர்த்திகளும் சீரியல் பல்புகளும் வந்த பொழுதும் காற்றில் அசைந்தாடும் என்னை விளக்குகள்தாம் மனதை கவர்கிறது. சில வீடுகளின் சுவற்றில் விளக்கிலிருந்து என்னை வழிந்து கோடுகளாக அடுத்து சுண்ணாம்பு அடிக்கும் நாள்வரை கார்த்திகையை நினைவுபடுத்தும்.

பொரி உருண்டை, அவல் உருண்டை, அடை வெண்ணை என்று நாவுக்கும் விருந்து உண்டு. ஆக மொத்தத்தில் வேறு எந்த விசேஷங்களும் தராத ஒரு சந்தோஷத்தை நான் கார்த்திகை பண்டிகையில் அனுபவிக்கிறேன்.

No comments: