Saturday, October 11, 2008

பொன்னியின் செல்வன்

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பொன்னியின் செல்வன் தொடர் கதையாக கல்கியில் வரப்போகிறதென்று அம்மாவுக்கு ஒரே குஷி. கல்கியின் எல்லா இதழ்களையும் சேர்த்து வைத்து பொன்னியின் செல்வனை தனியே எடுத்து தைத்து புத்தகங்களாக வைத்துக்கொண்டு படிப்பார். அன்றைக்கு இருந்த நிலையில் இவ்வளவு பெரிய கதைப் புத்தகத்தை எப்படிப் படிக்கிறார்களோ என்று மலைத்துப் போயிருக்கிறேன். மணியம் மற்றும் வினு
போன்றோர் கைவண்ணத்தில் சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியமாக காண்போர் கருத்தை கவர்ந்தன. அம்மாவின் கதை சொல்லும் நயத்தினாலும் மேற்கண்ட சிதிரங்களினாலும் கதையைப் பற்றியும் கதாபாத்திரங்களின் குணநலன்கள் பற்றியும் நான் ஒருவிதமான கர்ப்பனையை புனைந்து வைத்திருந்தேன். சமீபத்தில் விகியை நோண்டும்பொழுது திடீரென்று இந்த அரிய பொக்கிஷத்தை கண்டு ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். ஒரே மூச்சில் என்று சொல்லுமளவுக்கு அதனை தொடர்ந்து படித்து முடித்தேன்.
இங்கு நான் பொன்னியின் செல்வன் நாவலை ஆய்வு செய்ய வரவில்லை. இந்த நூல் என்னுள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே என் விழைவு.பொன்னியின் செல்வனில் வரும் இயற்கை வர்ணனை கற்பனை வலம் எல்லாம் என் தாயார் கூறக் கேட்டிருக்கிறேன். அனால் படிக்கும்பொழுது என்னமோ நானே தஞ்சை மண்ணில் நின்று பார்க்கும் காட்சி போன்று ஒரு நினைப்பு. கதாபாத்திரங்கள் நம்மைச்சுற்றி நடமாட விட்டு நம்மை கதைக்களத்தின் நடுவில் வைத்து விட்டார் கல்கி.
வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர், குந்தவை, நந்தினி ஆகியோரின் படங்களை நான் முன்பு பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது படிக்கும்பொழுது படங்கள் இல்லாத குறையே தெரியாமல் நம் கற்பனையை தம் சொற்களால் நிரப்பிவிடுகிறார். கதையின் போக்கு எப்பொழுது எவ்விதம் மாறும் என்று துளியும் கணிக்க முடியாதவாறு ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. முடிவு எப்படியிருக்கும் என்று ஊகிக்கவும் நம்மால் முடியவில்லை. அவ்வளவு திறம்பல் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் ஞாயம் வழங்கவும் அவர் விரும்புவது நம்மை நெகிழ வைக்கிறது. துவக்கத்தில் பேயாக பிசாசாக சித்தரிக்கப்படும் நந்தினிகூட நம் அபிப்ராயத்தில் நல்ல ஒரு இடத்தைப் பிடிக்கிறார்.உலகத்தில் கேட்டவர்கள் யாரும் தமாக கேட்டவர்கள் இல்லை. சமுதாயமும் சூழ்நிலையும் ஒருவரை அவ்வாறு உருவாக்குகின்றது என்பதை நந்தினி மற்றும் பழுவேட்டரையர் ஆகியோர் பத்திரங்கள் மூலம் நிலை நிறுத்துகிறார் கல்கி.கதையை படித்து முடித்ததும் கதாபாத்திரங்களை விட்டு பிரிய மனமில்லாமல் திரும்பவும் நம் மனம் முதல் பக்கத்தை படிக்க தொடங்குகிறது.