Friday, January 2, 2009

புலர்ந்தது புத்தாண்டு.

மனித வாழ்வின் ஆதாரமாக இருப்பது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தான் சந்தித்த இனிய அனுபவங்களையும் தனக்கேற்பட்ட வருத்தங்களையும் நஷ்டங்களையும் அசைபோட்டு வரும் ஆண்டில் மேன்மையுற சிறந்ததாக புதிய வழிகளை நாடி மேற்கொள்ளும் வழக்கம் ஒவ்வொரு புத்தாண்டிலும் இருக்கிறது.

சென்ற ஆண்டில் நாம் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதும் புதிய உறுதிமொழி ஏற்பதும் உலகளாவி வரும் வழக்கம். ஆனால் எத்தனைபேர் உறுதியுடன் இருப்பர் என்பது வேறு. சென்ற ஆண்டின் இழப்புக்கள் தந்த பாடங்களை எத்தனை பேர் கற்றிருக்கின்றனர்?

புத்தாண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து திரும்பவும் சகஜ வாழ்வுக்கு திரும்பும் பழைய மனிதர்களாகவே எல்லோரும் காண்கின்றனர். வாழ்த்துச் சொல்வதும் S.M.S. அனுப்புவதும் புது காலண்டர், டைரி சம்பாதிப்பது மட்டுமே புத்தாண்டின் முக்கிய குறிக்கோளாகி விடுகிறது. மற்றபடி ஒருவர் தம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை துவக்கும் உணர்வு குறைந்து விடுகிறது.