Sunday, July 27, 2008

ஐயோ . . .

சொல்லி வாய் மூடவில்லை, அதற்குள் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு என்று செய்தி. அடுத்தது எங்கே என்ற கேள்வி மனதில் வந்து மோதுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, யாருமில்லாத பாலைவனச் சுடுகாட்டில் தன் வெற்றிக் கோடியை நாட்டத் துடிக்கிறது தீவிரவாதம். மனித உயிருக்கு விலையுமில்லை உத்திரவாதமும் இல்லை. மனித சுதந்திரம் பயத்தின் பின்னால் ஒளிந்து நின்று அழுகிறது. அரசாள்பவர்கள் நம்பிக்கை தரும் வகையில் ஒன்றும் சொல்வதில்லை. அடுக்கடுக்காக கொன்று குவிப்போர் அடுத்த இலக்கு எது என்று சொல்லவும் முடியாது. இந்நிலையில் தனி ஒருவன் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சி யாரிடம் அடைக்கலம் புகுவது?

Saturday, July 26, 2008

பயங்கரவாதம். . .

இப்பொழுதுதான் ஒரு வெடிகுண்டு அதிற்சியிலிருந்து மீண்டு திரும்பவும் சகஜ நிலைக்கு வருகிறது நம் வாழ்க்கை. அதற்குள் இன்னொரு அதிற்சியா? யாரை பழிவாங்க அல்லது யாரை பயமுறுத்த செய்யப்பட்டது? யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விளங்கவில்லை. ஏற்கனவே பெங்களூருக்கு வேலைக்கு போகும் பெண்களின் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். போதாதென்று இந்த சம்பவம் இனி எல்லோருடைய வயிற்றிலும் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமான அன்னிய செலாவணியை ஈட்டுவதில் பெங்களூரின் பங்கு மகத்தானது. மறுக்க முடியாது. இங்கு வேலை பார்க்கும் தமிழர்களின் பங்களிப்பும் மகத்தானது. அதனையும் மறுக்க முடியாது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நம் மனதில் தோற்றுவிக்கும் பயம் நாளைய விடியலுக்கு ஒரு முட்டுக்கட்டையாகி விடும். ஏற்கனவே தொங்கிக் கொண்டு இரண்டும் கெட்டானாக இருக்கும், நம்முடைய I.T.தொழில், மேலும் சந்தேகத்திற்கு இடமாகி, நாளைய சமுதாயத்தின் முன் ஒரு பெரிய கேள்விக் குறியாக நின்று பயமுறுத்தும். இதில் ஐயமில்லை. சில அமெரிக்க கம்பெனிகள் இந்தியர்களின் சேவை வேண்டாம் என்று சொல்வதும், சில இந்தியக் கம்பெனிகள் சீனர்களை இங்கே வேலைக்கு சேர்ப்பதும் நம் பயத்தை, சந்தேகத்தை அதிகமாக்குகின்றன. கூடவே பயங்கரவாதமும் சேர்ந்துகொண்டால்? நினைக்கவே திகிலாக இருக்கிறது. இந்தியர்களின் வேலைத் திறத்திலும், தரத்திலும் சந்தேகமில்லை. ஊதியமும் ரொம்பவும் அதிகமாக இல்லை. இருப்பினும் ஏனிந்தப் பின்னடைவு?

Wednesday, July 9, 2008

தோல்வி தோற்கட்டும்.

தோல்வி என்பது ஒரு இழப்பா? வாழ்கையில் தோல்வி என்பது உன்னை நீ அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு. தோல்வியுறாதவன் அந்த வாய்ப்பை இழந்தவனாகிறான். உன்னை நீ கூர்நோக்க உதவும் தோல்வியை வெறுக்காதே. விடாமுயற்சிக்குப் பல கதைகளைக் கேட்டிருப்பாய். தோல்வியில் துவளாமைக்கும் பல கதைகளுண்டு. இன்று தோற்பவன் நாளையும் தோற்பான் என்று பயப்படாதே. தோல்வி உன்னை மெருகேற்றும். தோல்வி உன் கண்திறக்கும். தோல்வி உன் வலிமையைக் கூட்டும். இறுதியில்தான் வெற்றி வரும். இது தோல்வியின் தோல்வியா? அப்படியென்றால் தோல்வி தோற்கட்டும்.

எதை இழந்தாய் நீ?

மனிதனுக்கு முதல் தேவை தன்னம்பிக்கை,
அதை இழக்காதவரை நீ எதையும் இழக்கவில்லை.
நீ எதையும் இழக்க முடியாது. முதலில் உன்னை நம்பு.
உன் கல்வி, அது நீ கற்றது.
உன் செல்வம், அது நீ சேர்த்தது.
உன் நாவன்மை அது உன் சொத்து.
உன் நம்பிக்கை, அது உன் கவசம்.
இதில் யார் எதைப் பறிக்க முடியும்?
உன் பயம் என்ன? உன் சந்தேகம் என்ன?
உடற்சோர்வு உன்னை வருத்துகிறதா, இல்லை
மனச்சோர்வு உன்னை துரத்துகிறதா? யோசித்துப்பார்.
சோர்வும் பயமும் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்.
அவற்றை உதறித் தள்ளிவிடு. உற்சாகம் தேடி வரும்.
கவலை ஒரு பிணி. ஆறுதல் அதற்கு மருந்தாகாது.
கவலையை விட்டொழிப்பதே மருந்து.
இதையும் மீறி வருந்துகிறாயா ? வா, நானிருக்கிறேன்
தாயாய்த் தந்தையாய் உற்ற தோழனாய் நானிருக்கிறேன்.
கவலைகளை களைந்தெறிய மருத்துவனாய்
நற்றடத்தில் நடத்திட நல்லாசானாய் நானிருக்கிறேன்.
இனி கவலைகளைத் துறந்துவிட்டு
வாழ்கை கதவுகளைத் திறந்துவிடு.
ஆதவனின் ஒளிவேள்ளம்போல் வாழ்வு மலர்ந்திடும்.
காலைப்பனிபோல் துன்பம் கரைந்திடும்.
வண்ணமலர்ச் சோலையாய் இன்பம் சேர்ந்திடும்.
வாழ்த்துக்கள்.

கோவை பொலிவு பெறுகிறது.

சமீபத்தில் கோவையில் காணப்பட்ட ஒரு மாற்றம் , அதன் வானளாவிய விளம்பரப் பலகைகளின் நீக்கம். கோவைக்கு என்னவாயிற்று திடீரென்று? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இவற்றுக்கெல்லாம் பதில் தேடுவதை விடுத்து நடந்துவரும் மாற்றம் எந்த வகையில் நல்லது என்று பார்ப்போம். ஏற்கனவே பிளெக்ஸ் பிரிண்டிங் வந்த பின், விளம்பரப் பலகைகளின் அகல நீள உயரங்கள் எல்லாம் மிகவும் பெரிதாகி பயமுறுத்துகிறது. இதில் மொட்டை மாடிகள் ஏதும் தெரிந்தால், அதில் கட்டிவிடுகின்றனர் பெரிதாக ஒரு ஹோர்டிங். சினிமா விளம்பரங்கள், துணிக்கடை விளம்பரங்கள், செல்போன் கம்பெனி விளம்பரங்கள், இது தவிர கோவையின் முன்னணி மோட்டார் பம்புசெட் கம்பெனிகளின் விளம்பரங்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்றாக நின்று கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரத்தில் காட்சி தருகின்றன. பாதை ஓரங்களிலும் இவற்றின் பிரேம் பதிக்கப்பட்டு நடப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவது மட்டுமல்லாமல் இவை கட்டிடங்களின் அழகையும் கெடுக்கின்றன. இப்பொழுது விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு, கட்டிடங்களின் உச்சியில் எலும்புக்கூடாய் அவற்றின் பிரேம் மட்டும் நிற்பது ஒரு மாதிரி இருக்கிறது. இவ்வாறே சுவர் விளம்பரங்களும் ஒரு சுவரையும் வெள்ளையாக விட்டு வைப்பதில்லை. தனியார் வீட்டு காம்பவுண்டு சுவர்கள், கூட்ஷெட் ரோட்டிலுள்ள ரெயில்வே சுவர் என்று எங்கு பார்த்தாலும் வண்ணஜாலம்தான். சினிமா போஸ்டர்களும் ஒரு புறம் நாறடிக்கின்றன. தமிழ், ஆங்கிலம் என்று வகை வகையாக போஸ்டர்கள். ஒன்றை கழற்றினால் இன்னொன்றில் விளம்பரம். வானொலியில், தொலைக்காட்சியில், சுவரில் ஏன் ஆகாசதில்கூட விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியப் படாதீர்கள். இவ்வளவும் எதற்கு? மாசக் கடைசியில் கையில் காசு இல்லையென்றாலும் கடன் தர அட்டைகள்தாம் உள்ளனவே, அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் தேவையில்லாத பொருட்களை வீட்டில் தேக்கி கடனாளியாவதற்குதான். இந்த பேனர்களை மட்டும் எடுத்தால் போதாது. பயனுள்ளதை பார்த்து, தேவையானவற்றை மட்டும் தேர்ந்து, அவசியமானதை மட்டும் வாங்கும் பக்குவத்தை பொதுமக்கள் நடுவில் பரப்பும் விழிப்புணர்வுதான் இன்றைய முதல் தேவை. சிந்திப்பார்களா விளம்பரம் செய்வோரும் அவற்றை நீக்குவோரும்?

Saturday, July 5, 2008

தேடுதல் நிற்காது

நேற்று என் ஆர்குட் ஹோம் பேஜில் கண்ட பெயர்களில் ஒவ்வொன்றாக தட்டி தேடியதில் ஒரு அரிய பொக்கிஷத்தைக் கண்டேன். கண்ட உடனே பிடித்து விட்டது . உடனே என் எண்ணத்தை ஸ்க்ராப் செய்தேன். திரு. லோகநாதனின் ஆல்பத்தில் நான் கண்டதெல்லாம் அற்புதமான படங்கள். புகைப்படக் கலையின்மீது எனக்குள்ள அளவற்ற ஆவலால் நான் மீண்டும் மீண்டும் அந்த ஆல்பத்தை திறந்து பார்கிறேன். நல்ல கேமரா மட்டும் ஒரு கலைஞனை உருவாக்க போதாது . நல்ல கண்ணும் , கருத்தும், தொழிலின் மீது ஆர்வமும், நம்பிக்கையும் , நல்ல ஈடுபாடும் , இடைவிடா முயற்சியுமே ஒரு புகைப்படக் கலைஞனை உருவாக்கும் என்பது திரு. லோகநாதன் அவர்களின் படங்களே பறைசாற்றுகின்றன. எப்படியும் இந்த கலைக் களஞ்சியத்தை பிடித்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நானிருக்கும் கோவையிலேயே இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டுமென்றால் , அது நான் பெற்ற பேறே.

Thursday, July 3, 2008

എങ്ങിനെയുണ്ട്‌ ആശാനെ?

എനിക്ക് മലയാളത്തില്‍ ബ്ലോഗ് എഴുതണമെന്നു ആഗ്രഹമുണ്ട് . പക്ഷെ ഞാന്‍ മലയാളം എഴുതി പഠിച്ചിട്ടില്ല . ആരെങ്ങിലും എനിക്ക് അക്ഷരങ്ങള്‍ എഴുതാന്‍ സഹായിച്ചാല്‍ ഞാന്‍ മലയാളത്തിലും എഴുതാന്‍ പഠിക്കാം . അതുവരെ എന്‍റെ എഴുത്തില്‍ തെറ്റ് പൊറുക്കണം . ഇതിനെ കുറിച്ചു ദയവായി കമന്റ്ടും എഴുതണം.
എന്ന്
മുത്തുരാമാസ്വാമി