Sunday, August 10, 2008

சுப்பிரமணியபுரம்....

ஒரு பாட்டை கேட்டதும் இது ஒரு பழைய கதை என்று தெரிந்தது. ஸ்டெப்கட்டிங்கும் பெல் பாட்டம் பேண்டும் போட்டு ஒரு ஹீரோ. படம் நம்ம காலேஜ் கதை மாதிரி இருக்கும் என்று நினைத்தேன். முதல் பாதி முழுவதும் கதையில்லாத சம்பவங்களாக தோன்றியது. வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கிராமத்து இளசுகளின் கதை என்று நினைத்தேன். அனால் இடைவேளைக்குப் பிறகு நட்பு , காதல், நன்றி உணர்ச்சி, காட்டிக்கொடுத்தல், பழிவாங்குதல் என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்துப் பிசைந்து ஒரு அருமையான கதைக் களத்தை நம் முன் வைக்கிறார் சசிக்குமார் . முற்றிலும் புது முகங்களாக இருக்க கதை நம்மை ஒரு முப்பது வருடம் பின்னோக்கி இழுக்கிறது. கண்கள் இருந்தால் பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. நல்ல படம். கேமரா கிராமத்தின் சந்துகளினூடே ஓடி விளையாடுகிறது. ஆரம்பத்தில் இருந்த நக்கலும் நையாண்டியும் காணாமல்போய், படம் ரத்தச் சிவப்பாக முடிகிறது.

Friday, August 8, 2008

சிரிப்பிற்கும் அர்த்தமுண்டோ?....

சென்ற சில நாட்களாகவே என் இனிய உறவுகளின் வருகை என்னை இன்பக் கடலில் ஆழ்திக்கொண்டிருக்கிறது. மேலும் நான் என் இளமைப் பருவத்தினை அசைபோட இந்த வரவுகள் உதவுகின்றன. நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆடிப் பாடி ஓடி விளையாடிய நாட்களை நினைக்கையில் மனமும் இளமையாகிறது. இப்பொழுது வந்திருப்பது மீனா, என் மாமன் மகள். அந்த நாட்களில் நாங்கள் நாட்கணக்கில் அரட்டை அடித்து, பாட்டுப் பாடி, சீட்டு விளையாடி, Dumb charade விளையாடி, கும்பலாக ஊர்சுற்றிய நாட்களை நினைவு கூர்ந்தோம். எனக்கு ஹிந்திப் பாடல்களின் வரிகளை அவள் எழுதித்தர நான் அவற்றைப் பாடுவேன். நான் அனு, மீனா, லக்ஷ்மி, சீதாலக்ஷ்மி என்று கூட்டு சேர்ந்து night rounds போனால் இரவு லேட்டாக வீடு திரும்பி பெரியவர்களிடம் பாட்டு வாங்குவோம். போத்தநூரின் நடுங்கும் குளிரில் பெண் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இப்படி இரவு நேரத்தில் வெளியில் போகாதே என்று எத்தனை முறை படித்து படித்து சொல்லியிருக்கிறேன் - இது அப்பா, இப்படி பெண்களை வெளியில் கூட்டிண்டு போய் அவாளை காத்து கருப்பு அடிச்சா பெத்தவாளுக்கு யாரு பதில் சொல்லறதாம் - இது அம்மா, இப்படி எல்லார் வாயிலும் விழுந்தாலும் எங்கள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆண்பிள்ளைகள் சேர்ந்தால் டீம் பிரித்துக் கொண்டு கிரிக்கெட், பேட்மின்டன் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது, தண்ணீர் தொட்டியில் இறங்கி நின்று கூட்டமாகக் குளிப்பது என்று இருப்போம். பெரியவர்கள் எப்பொழுதும் தங்கள் பாட்டை பாடிக் கொண்டே இருப்பார்கள். எங்கள் காதுகள் அவற்றை வாங்கிக்கொண்டதே இல்லை. பிடித்த பாடல்களை உரக்கக் கத்திக் கொண்டு நடப்போம். எதிர்ப்படுவோர் எல்லாரும் எங்கள் கண்களில் தமாஷாகத் தெரிவார்கள். எங்கள் சிரிப்புக்குக் காரணம் தேவையில்லை. அப்பா ஒரு முறை " இவன், அதோ போறானே... அவன் கழுத்து மேல தலை... ம்பான். அதுக்கு இதுகள் எல்லாம் சிரிக்கும்... அர்த்தமே இல்லாம" என்று சொன்னார். நாங்கள் அதற்கும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம். சிரிப்பதற்கும் சந்தோஷப் படுவதற்கும் எங்களுக்கு என்றுமே அர்த்தம் தேவைப்பட்டதில்லை. இன்றுவரை.