Thursday, June 5, 2008

மறைந்திருக்கும் கலைஞன்......

மோகன், எனக்குத் தம்பி என்பதைவிட ஒரு நல்ல நண்பன் என்றே நான் என்றைக்கும் நினைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக கோவையின் வீதிகளில் சுற்றியதும் , கல்லூரிகளில் படியேறி இறங்கியதும், கிரிக்கெட் , பேட்மிண்டன் விளையாடியதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்ததும் ..... அவை மறக்க முடியாத நாட்கள்.
தன் வாழ்வில் ஒரு உன்னத இடத்தைப் பிடிக்கும் நோக்கு மோகனுக்கு என்றைக்கும் இருந்தது. பலவிதமான வியாபாரங்களில் , பலருடன் கூட்டு சேர்ந்து அவன் கண்டது அலைக்கழிப்பும் , பொருள் நஷ்டமும்தான். இவன் ஏன் இப்படி பணத்தை கொடுத்து ஏமாறுகிறான் என்று நான் வருந்தியதுண்டு. ஆனால் மோகனுக்கு ஏதேனும் ஒரு தொழிலில் நிலைத்து நின்று முன்னுக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
ஒரு முறை நான் பொருட்காட்சிக்கு போனபோது , அங்கு ஒரு ஸ்டாலில் மாஜிக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற போர்டை பார்த்தேன். கையிலிருந்த பணத்தில் சில சாமான்களை வங்கி வந்தேன். வீட்டில் வந்து செய்து காண்பித்ததில் பலருக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதில் மோகனும் ஒருவன். ஆனால் அவனுக்கிருந்த வியாபார நோக்கில் இதில் ஈடுபடுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.
அடுத்த வருடம் அதே பொருட்காட்சியில் அந்தக் கடைக்காரருடன் சிநேகிதம் பிடித்து தொழிலுக்குள் புகுந்துவிட்டான் மோகன். கையிலிருந்த பணத்தை செலவு செய்து வழக்கம்போல் இதிலும் கையை சுட்டுக்கொண்டான். ஆனால் இந்தமுறை தொழிலை விட்டு ஓடவில்லை. பல இடத்தில் சுற்றித் திரிந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டான். சிறிது சிறிதாக வியாபாரம் முன்னேறி இன்று தான் நினைத்த உன்னத இடத்தை பிடித்துவிட்டான். இன்று மோகன் ஒரு மாஜிக் வியாபாரி. தன்னிடம் வரும் மாஜிக் கலைஞர்களுக்கு தந்திரங்களை செய்து காட்டி அவர்களுக்கு விற்ப்பது தான் தொழில். அனால் அவன் மற்றவர்களுக்கு செய்து காண்பிக்கும் அழகைப் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு அரிய கலைஞனை ஒளித்து வைத்துள்ள விஷயம் புலப்படுகிறது. இதுவரை மேடையேறி ஒருமுறைகூட தன் திறைமையை மோகன் வெளிப்படுதியதில்லை. அனால் அவனிடம் வரும் கலைஞர்கள் அனைவருக்கும் தெரியும் இந்த கலைஞனை. அனாலும் மோகன் இன்னும் வியாபாரிதான்.

No comments: