Monday, October 12, 2009

உன்னைப்போல் ஒருவன்.

மலையாளத்தில் சாணக்யன் என்ற ஒரு படம் வந்தது. டெக்னாலஜி எப்படியெல்லாம் பயன்படுத்த படுகிறது என்று வியக்க வைத்தது அந்தப் படம். பின் குருதிப் புனல், காக்க காக்க இரண்டும் போலீஸ் காரரின் குமுறல்களை வெளிப்படுத்தின. இப்பொழுது எல்லாவற்றையும் குழைத்து ஒரு படம் உன்னைப்போல் ஒருவன். இதில் நெட்வொர்க் ஹாக்கிங் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்க முடியும் என்று சொல்கிறது. மோகன்லால் ஒரு போலீஸ் எப்படி தன் தொழிலை நேசிக்க முடியும் என்று காட்டுகிறார். கதை ரொம்ப சிம்பிள். ஒரு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போலீசை ஓடவைக்கிறது. தீவிர வாதிகள் நான்குபேரை விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஊரில் குண்டு வெடித்து உயிர்சேதம் ஏற்படும் என்ற மிரட்டல். இறுதியில் விடுவிக்கப்பட்ட தீவிரரவாதிகள் குண்டு வைத்து கொல்லப்படுகிறார்கள். இறுதியில் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என்ற தத்துவம்.

படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அனாமதேய கமலகாசன் துளியும் சிரமம் இல்லாமல் தன் பங்கை செய்திருக்கிறார். ஆனால் ஒரு சிக்கலான கட்டத்தில் எவ்வளவு டென்ஷன் ஆகா முடியும், ஒரு நல்ல முடிவு காண எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்று போலீஸ் கமிஷனர் ஐ . ஜி. ஆர். மாராராக மோகன்லால் திறமையாக செய்திருக்கிறார். கமலகாசன் போன்ற ஒருவர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய போலீசுக்கு மிரட்டல் விடும்போழுதே இது வேறே எதோ விஷயம் என்று ஒரு பொறி தட்டுகிறது. இந்த வேஷத்தில் நாசர் நடித்திருந்தால் நமக்குள் வேறு மாதிரி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி , பிறகு இறுதியில் தீவிரவாதிகளைக் கொல்லும்பொழுது நமக்கு ஒரு ஆச்சரியம் கலந்த திருப்பம் ஏற்பட்டிருக்கும்.

தீவிரவாதத்துக்கு மருந்து தீவிரவாதம்தான் என்ற கருத்து மிகவும் ஏமாற்றமளிக்கிறது. காந்தியை இடதுகைப் பழக்கதுகாக ஏற்கும் ஒருவர் அவர் கொள்கைகளை புறக்கணிப்பது நன்றாயில்லை. கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி மிகவும் நன்றாக உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படம். அதில் ஐயமில்லை. ஆனால் நெருடல்களுக்கும் பஞ்சமில்லை.

No comments: